1. குமரன் கண்டன்
2. குமரன் மறவன்
3. கண்டன் அமுதன்
4. மறவன் கண்டன்
5. கண்டன் சத்ருபயங்கரன்
6. கண்டன் சுந்தரசோழன்
7. கண்டன் மறவன்
இதுதான் கல்வெட்டுகளிலிருந்து வரலாற்றுச் செய்திகளை வடித்தெடுக்கும் முறை. கல்வெட்டுகளில் இருப்பவை பெரும்பாலும் நிவந்தங்கள் கொடையளித்த செய்திகள்தான். ஆனால் அவற்றினுள் ஒளிந்திருக்கும் செய்திகளை Reading through the lines என்று ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்கினால், வரலாறு வெளிப்படும். ஒரு மின்விளக்கைக் கொடையளித்துவிட்டு, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை மறைக்குமளவுக்குத் தன் பெயரை எழுதிவைத்து விடும் இக்காலத்து வழக்கத்துடன் கல்வெட்டுகளை ஒப்பிட்டுப் புறந்தள்ளாமல், அவை எப்பேற்பட்ட அட்சயப் பாத்திரங்கள் என்று உணரத் தலைப்படுவோமே!
கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் ஆகிய மூவரும் உடன் பிறந்தவர்கள் என்ற செய்தி உடையார்குடி அனந்தீசுவரர் கோயில் கல்வெட்டின் மூலம் தெளிவாகின்றது. எனவே, இவர்கள் மூவரின் பெயர்களிலும் உள்ள கண்டன் என்பது மறவன் கண்டனின் பெயர் என்று புரிந்து கொள்ளலாம். இதே அடிப்படையில் பார்த்தால், இந்த 7 பேர்களுக்குள் உள்ள உறவு முறையைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.
“முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவூரை ஆண்டுகொண்டிருந்த பழுவேட்டரையர் யாரென்பது உறுதியாகத் தெரியவில்லை. வேறு சான்றுகள் ஏதுமற்ற நிலையில் இவரைக் கண்டன் மறவனாகவே கொள்ளலாம். உத்தமச்சோழரின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் மன்னராக ஆட்சிப் பொறுப்பினை ஏற்று, முதலாம் இராஜராஜர் காலத்தில் மன்னுபெரும் பழுவூரில் திருத்தோற்றமுடையார் கோயிலைச் செங்கல் திருப்பணியாய் எடுப்பித்து, முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுடன் வரலாற்று நீரோட்டத்திலிருந்து மறையும் கண்டன் மறவனுடன் பழுவேட்டரையர் மரபும் ஒரு முடிவுக்கு வருகிறது. முதலாம் ஆதித்தரின் பத்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் அரசராகப் பழுவேட்டரையர் குமரன் கண்டனோடு தொடங்கும் பழுவேட்டரையர் ஆட்சி முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவேட்டரையர் கண்டன் மறவனை இறுதி மன்னராய்க் காட்டி முற்றுப் பெறுவதாகக் கருதலாம்.” என்று பழுவூர் – அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற தனது நூலில் முனைவர் இரா.கலைக்கோவன் உரைக்கிறார்.
மறவன் கண்டன் சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தில் பழுவூரை ஆண்டவர். இவரது மூன்று பிள்ளைகளில் கண்டன் மறவன் சுந்தரசோழருக்குப் பிறகு சுமார் 40 ஆண்டுகள் பழுவூரை ஆண்டார். எனவே, அப்போது கண்டன் மறவன் சிறுபிள்ளையாயிருக்க, மூத்த சகோதரர்கள் கண்டன் சத்ருபயங்கரனும் கண்டன் சுந்தரசோழனுமே சுந்தரசோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள். இப்போது புரிகிறதா? கல்கி ‘பெரிய பழுவேட்டரையரையும்’, ‘சின்னப் பழுவேட்டரையரையும்’ எங்கிருந்து எடுத்தார் என்று?
இத்தனை சிறப்புகள் வாய்ந்த பழுவூரைக் காண வாசகர்கள் விரும்பினால், திருச்சிராப்பள்ளியிலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் 55வது கிலோமீட்டரில் தஞ்சாவூர்/திருவையாறு செல்லும் சாலை பிரியுமிடத்தில் அமைந்துள்ள பகைவிடையீசுவரம்,
அவனிகந்தர்ப்ப ஈசுவரம், திருவாலந்துறையார் கோயில் மற்றும் மறவனீசுவரம் ஆகிய கோயில்களுக்குச் சென்று வீரவரலாற்றைத் தரிசிக்கலாம். பழுவூர்க் கோயில்களின் சிற்பக்கலை, கட்டடக்கலை மற்றும் கல்வெட்டுகளை முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு ஒரு பரிந்துரை. செல்லும்போது முடிந்தால் முனைவர் கலைக்கோவன் எழுதிய பழுவூர் – அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற நூலை எடுத்துச் செல்லவும். கோயில்களின் மீதான உங்களின் பார்வை முற்றிலுமாக மாறி, சரித்திர ஆர்வ வியாதி முற்றுவதைக் கண்கூடாகக் காணலாம்.













