சோழர் படை

cholan-copy

கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின. தங்கள் பெயராலேயே கோயில்கள் அமைக்கவும் அவற்றிற்குத் தானங்கள் கொடுக்கவும் இப்பிரிவுகளுக்கு உரிமை இருந்தது. தனிப்பட்ட படை வீரர்களும் இவ்வாறு தானம் செய்தவர்களின் பெயர்களும் அவரைச் சார்ந்த படைப்பிரிவின் பெயர்களும் நமக்கு கல்வெட்டுக்களின் மூலம் கிடைத்துள்ளன. இப்படைகளின் இராணுவ வாழ்க்கை முறையைவிட, வீரர்கள் தம் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த பணிகளைப் பற்றித்தான் அதிகமாக அறியக் கிடைக்கிறது.

ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட இப்படைப் பிரிவுகளின் பெயர்களை இராஜராஜனின் கல்வெட்டுக்களிலிருந்து அறிஞர் திரு. வெங்கய்யா அவர்கள் சேகரித்திருக்கிறார். இவற்றை இராஜராஜனுக்கு முன்னும் பின்னும் இருந்த பிரிவுகளுடன் சேர்த்துக் கணக்கிட்டால் சுமார் 70 ஆக உயரும். இவை ஒவ்வொன்றின் பெயரும், அப்படைய துவக்கிய காலத்தையும் சூழ்நிலையையும் மக்களுக்கு நினைவூட்டுவதாய் இருந்திருக்கக்கூடும். இதுவரை நாம் அறியாத அரசர்களின் பல விருதுகளே இவற்றின் பெயர்களாயின. உதாரணத்திற்கு பார்த்திப சேகரன், சமரகேசரி, விக்கிரமசிங்கன், தாயதொங்கன், தானதொங்கன், சண்டபராக்கிரமன், இராஜகுஞ்சரயன் போன்ற பெயர்களைச் சொல்லலாம்.

சோழப்படையின் வளர்ச்சியைப் பற்றிய பல்வேறு பகுதிகளைப் பற்றியும் இப்பெயர்களிலிருந்தே அறியலாம். “ஆனையாட்கள்” அல்லது “குஞ்சரமல்லர்” என்றும் குறிப்பிடப்பட்ட யானைப்படையைப் பற்றியும் “குதிரைச் சேவகர்” என்று அழைக்கப்பட்ட குதிரைப்படையைப் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. மற்றும் காலாட்படையின் பல பகுதிகள் பற்றியும் குறிப்புகள் கல்வெட்டுக்களின் காணப்படுகின்றன. கைக்கோளாளரைக் கொண்ட பிரிவு “கைக்கோளப் பெறும் படை” என்று அழைக்கப்பட்டது. கைக்கோளர் என்றால் நெசவாளரைக் குறிக்கும் சொல்லாகக் கொள்ளக்கூடாது. கைப்பலம் பொருந்திய வீரர்களைக் கொண்ட படைப் பிரிவைக் குறிப்பதாக கொள்ளவது பொருத்தமாகயிருக்கும்.

வில்லேந்திய வீரர்கள் “வில்லிகள்” என்றும், வாளேந்திய வீரர்கள் “வாள்பெற்ற கைக்கோளர்கள்” என்றும் குறிக்கப்படுகின்றனர். வலங்கை வகுப்பைச் சேர்ந்த வேளைக்காரர் என்போர் போர் படையில் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். இலங்கையில் பொலன்னறுவாவிலிருக்கும் விஜயபாகு மன்னன் கல்வெட்டில் இடங்கை வேளைக்காரர்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இவ்வேளைக்காரர் என்போர் தேவைப்பட்ட போது தற்காலிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட(அணி) படைச் சேவகர்கள் என்ற கருத்து உள்ளது ஆனால் இது சரியான ஒன்று இல்லை. மாறாக இவர்கள் நிரந்தரமான நம்பிக்கைக்குப் பாத்திரமான சேவகர்களாகப் பணிபுரிந்தனர். பெயருக்கேற்ப வேளை வரும்போது இவர்கள் தம் உயிரையும் கொடுத்து அரசனைக் காப்பாற்றினர் என்றுதான் கருதவேண்டும்.

பிற்கால இலக்கியச் சான்றுகள் சில இக்கருத்துக்கு வலிவு தருகின்றன. பிற்காலப் பாண்டிய நாட்டில் பணியாற்றிய “தென்னவன் ஆபத்துதவிகள்” என்போர் இவ்வேளைக்காரரைப் போன்றவரே. இவர்கள் அனைவரும் அரசரின் அருகிலேயே இருந்தனர் என்றும், மிக்க அதிகாரம் பெற்றிருந்தனர் என்றும் மார்க்கோபோலோ குறித்துள்ளார். படைகளுக்குள் சிறுதனம் பெருதனம் என்ற பாகுபாடும் இருந்ததாக கல்வெட்டுக்களில் இருந்து தெரியவருகிறது.

மூன்று கை மகாசேனையைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பு :

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அம்பாசமுத்திரத்தை அடுத்துள்ள திருவாலீசுரத்திலிருக்கும் அரியதொரு கல்வெட்டு அங்கிருந்த மூன்று கை மகாசேனை(மூன்று அங்கங்களைக் கொண்ட பெரும் சேனை)யைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களைத் தருகிறது. அக்கல்வெட்டு முதலாம் இராஜராஜன் அல்லது முதலாம் இராஜேந்திரன் காலத்திலோ எழுதப்பட்டதாக இருக்கவேண்டும். அக்கல்வெட்டில் காணப்படுபவை.

இவர்கள் விஷ்ணுவையையும் சிவபெருமானையும் வழிபட்டனர். கன்னரதேவனைத் தோற்கடித்துத் துரத்தினர்; காங்கேயனை வென்றனர்; கல்பாடம் என்ற ஊரையும் கடற்கரையிலுள்ள விழிஞத்தையும் அழித்தனர். கடல் கடந்து கிழக்கே சென்று மாதோட்டத்தை அழித்தனர்; மலை நாட்டைக் கைப்பற்றினர்; சாலையிலுள்ள கடற்படையை அறுத்தனர்; வள்ளாளன் என்ற சாளுக்கியரை புறம்காட்டி ஓடச் செய்தனர்; வனவாசி நகரைக் கைப்பற்றினர்; இச்சாதனைகளுக்காக காளஹஸ்தியிலுள்ள தமிழ்ப் புலவர்களால் புகழ்ந்து பாடப் பெற்றனர்; மேலும், குச்சி மலையிலுள்ள கோட்டையை அழித்து உச்சந்தி நகரைப் பிடித்தனர். தங்களை எதிர்த்த வடுகர்களை முறியடித்தனர். வாதாபிக் கோட்டையைத் தகர்த்து அந்நகரையும் கைப்பற்றினர். இம்மகா சேனையினர் பாண்டிய நாட்டில் தங்கியிருந்தனர் என்றும் மூவகையான பெரும் சேனையைச் சார்ந்த அஞ்சாநெஞ்சம் படைத்த வீரர்கள் என்றும் குறிக்கப்படுகின்றனர். திருவாலீசுரம் கோயிலையும் அதைச் சார்ந்த பூசாரி மற்றும் பணியாட்கள் உட்பட அனைத்தையும் இச்சேனையினர் பேணிவந்தனர்.

மேலே குறிப்பிட்டுள்ள வெற்றிகள் அனைத்தும் இராஜராஜன், அவரது மகன் இராஜேந்திரன் காலத்தில் அடைந்த வெற்றிகளாகும். கி.பி. 1096ல் பொறிக்கப்பட்ட சேரன் மாதேவி(சேரமாதேவி) கல்வெட்டு ஒன்றில் இம்மாசேனையினரின் வீரக்கனவுகள் பற்றிக் கூறப்படுகிறது. மற்றொரு கோயிலையும் அதன் சொத்துக்களையும் இம்மான்சேனை தன் பாதுகாப்பின் கீழ்க் கொண்டுவந்தது என்று அந்தக் கல்வெட்டு கூறுகிறது.

 சீன அறிஞர்களின் சோழர்படையைப் பற்றிய குறிப்பு :

கி.பி. 1178-ல் ஒரு சீன அறிஞர் சோழ நாட்டைப் பற்றியும் சோழர்படையைப் பற்றியும் பின்வருமாறு எழுதியுள்ளார். “இந்நாடு மேற்கு நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினரிடம் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானையும் 6 அல்லது 7 அடி உயரம் உள்ளது. போரிடும்போது யானைகளின் மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் வீரர்கள் அமர்ந்து கொண்டு நெடுந்தொலைவிற்கு அம்பு எய்கின்றார்கள். அருகே உள்ளவர்கள் ஈட்டிகளால் தாக்குகின்றனர். வெற்றி அடைந்தவுடன் யானைகளுக்கு விருந்து கொடுத்து கௌரவிக்கின்றனர். சிலர் அவைகளுக்கு பொன்னாலான அம்பாரிகளைப் பரிசாகத் தருகின்றன. ஒவ்வொரு நாளும் அரசர் முன் யானைகள் கொண்டுவரப்படுகின்றன.

 கடற்படை :

இராஜேந்திரனின் படை வீரரை ஏற்றிச் சென்ற “எண்ணிலடங்காக் கப்பல்கள்” கடல் கடந்து ஸ்ரீவிஜயத்தையும் அதைச் சார்ந்த தீவுகளையும் கைப்பற்றியது ஒரு திடீர் சாதனை அல்ல; சோழர்கள் கடைபிடித்த திட்டவட்டமான கடற்படைக் கொள்கையின் விளைவேயாகும். சங்க காலத்திலேயே சோழர்கள் கடல் வாணிகத்திற்கு அடிகோலினர். பிறகு பல்லவர் காலத்தில் கப்பல் போக்குவரத்துப் பெருகிய காரணத்தால் தென்னிந்தியாவிற்கும், மலேயா(மலேசியா, சிங்கப்பூர்) இந்தோசீனா போன்ற தீவுகளுக்குமிடையில் வாணிகக்கலைப் பண்பாட்டுறவு மேலும் வளர்ந்தது.

9-ம் நூற்றாண்டில் “மணிக்கிராமம்” என்னும் தென்னிந்திய வர்த்தகக் குழு வங்கக்கடலைக் கடந்து எதிர்க் கடற்கரை ஓரத்தில் இயங்கத் தொடங்கிய செய்தியை அங்குள்ள தகுவாபா என்னுமிடத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது. பண்டைய வழக்கப்படியே சோழர்களும் தங்கள் கடல் ஆதிக்கத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டு பல வெற்றிகளைக் கண்டனர். ஈழம், மாலத்தீவு(Sri Lanka and Maldives) ஆகியவற்றைக் கைப்பற்றியது. சீன வரலாற்றில் குறிக்கப்பெற்றது போல, சீன நாட்டிற்கு தூதுக்குழுவை அனுப்பியது. இவையெல்லாம் இம்முயற்சியால் சோழர் கண்ட வெற்றிகளாகும்.

காந்தளூர்ச் சாலை கலமறுத்து, சேரர் படையை முறியடித்துத் தென்னிந்தியக் கடலில் சோழர் தங்கள் நிகரற்ற ஆதிக்கத்தை நிலைநாட்டினர். சோழர் காலத்திய கலங்களின் அமைப்பு எப்படி இருந்தது என்பதைப் பற்றி நேரடியான சான்றுகள் யாதும் கிடைக்கவில்லை. ஆனால் இதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மூன்று வகைக் கலங்கள் சோழ மண்டலக் கரையில் உலாவின என்று “பெரிப்ளூஸ்” என்னும் நூல் கூறியுள்ளதையும் பிறகு இராஜேந்திரன் பெரியதொரு கப்பற்படையைக் கொண்டு வெற்றிச் சாதனைகள் புரிந்ததையும் நோக்கும் பொழுது, சோழர் கப்பற்படை சிறியதும் பெரியதுமான பல கொண்ட சிறந்த படையாக அமைக்கப் பெற்றிருந்ததாகத் தோன்றுகிறது.

 போர் விளைவுகள் :

போர் என்பது இருதரப்பிலுமுள்ள படை வீரர்களுக்கிடையே மட்டும் நடந்த சண்டை எனக்கருதவும், நாட்டின் அன்றாட வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கவில்லை என்ற ஓர் எண்ணத்திற்குச் சிறிதும் ஆதாரம் இல்லை. சோழர் கல்வெட்டுக்களிலிருந்தும் அவர்களுடன் போரிட்ட சாளுக்கியரின் கல்வெட்டுக்களிலிருந்தும் நமக்கு தெரியவருவது, அவர்கள் செய்த கடும் போரினால் துங்கபத்திரை நதியின் இரு பக்கங்களில் இருந்த மக்களிடையே பல தலைமுறைக்குத் தாங்கமுடியாத துயரங்களை அப்போர் உண்டாக்கியது. போரிடும் பொழுது கடைபிடிக்கவேண்டிய சில உயர்ந்த மரபுகளையும் கண்ணியத்தையும் கூட மரந்து, அமைதியாக வாழ்ந்த மக்கள் பலவாறு துன்புறுத்தப்பட்டனர்.

ஈழத்திலும் கருநாடகப் பகுதியிலும் கிடைத்துள்ள சான்றுகளை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. சாளுக்கியக் கல்வெட்டுக்கள் முதலாம் இராஜேந்திரன் கோயில்களை அழித்தான் என்றும் குற்றம் சாட்டுகின்றன. சமய வேறுபாட்டினால் இது செய்யப்பட்டிருக்கலாம் என்றாலும், பொருளாசையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். சாளுக்கிய நாட்டில் செல்வச் செழிப்புடன் இருந்த பல சமணப் பள்ளிகள்(பஸ்திக்குகள்) ஆழ்ந்த சிவபக்தனான ராஜேந்திரனுக்கு நல்ல வேட்டைக் களமாக அமைந்தன என்று தெரிகிறது. அயல்நாட்டுப் படையெடுப்புக்களிலிருந்து சோழர்களுக்கு கிடைத்த பொருள்கள் ஏராளம். அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட பொன்னையும் பொருளையும் தான், அரசர்கள் தானமாக வாரிக்கொடுத்தனர் என்று அவர்கள் கல்வெட்டுக்கள் வெளிப்படையாக கூறுகின்றன.

பொதுவாக போர்க்களத்தின் மூலம் கிடைத்த பொருள் எல்லாம் அரசரையே சாரும். அவைகளை தன் விருப்பம் போல் பயன்படுத்தலாம். சீப்புலி பாகி நாடுகளில் கைப்பற்றப்பட்ட தொள்ளாயிரம் ஆடுகளை முதலாம் இராஜராஜன் தமது 6-ம் ஆட்சி ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருக்கும் துர்க்கைக் கோயிலுக்குத் தானமாக அளித்துத் தமது பெயரில் பத்து நந்தா விளக்கேற்றி வைக்கப் பணித்தார் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மற்றொரு கல்வெட்டில் மலைநாட்டைக் கைப்பற்றி, அங்கிருந்து கொண்டு வரப்பட்ட படிமங்களில் மரகதத்தேவர் படிமம் ஒன்றை அதிகார் ஒருவர் அரசனிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டு அதைத் திருப்பழனம் என்னும் ஊரில் கோயில் கொள்ளச் செய்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி : விக்கிபிடியா

 

This entry was posted in சோழன் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *