வரகுணன் பாண்டியன் -கி.பி. 792-835

pandian012

வரகுணன் கி.பி. 792 முதல் 835 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான்.இரண்டாம் இராசசிம்மனின் மகனான இம்மன்னன் இவன் பாட்டன் பெயரான சடையவர்மன் என்ற பெயரை சிறப்புப்பெயராகப் பெற்று சிறப்புற்றவன்.முதல் வரகுணப் பாண்டியனுமான வரகுணனைக் “கொற்றவர்கள் தொழுகழற்கால் கோவரகுண மகாராசன்” என சின்னமனூர் செப்பேட்டில் இவனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.நந்திவர்மன் சோணாட்டை ஆட்சி செய்த பொழுது வரகுணப் பாண்டியன் அவனுடன் போர் செய்தான் என சோழநாட்டில் அமையப்பெற்றிருக்கும் இவனைப் பற்றிக் குறிக்கும் கல்வெட்டுக்கள் பல கூறுகின்றன.

பொருளடக்கம் :
  • 1 சோழ நாட்டிலும்,தொண்டை நாட்டிலும் ஆட்சி
  • 2 வரகுணப் பாண்டியனின் சமயப்பணிகள்
  • 3 வரகுண பாண்டியனைப் பற்றிய புகழுரைகள்
    • 3.1 மணிவாசகர்
    • 3.2 பட்டினத்தடிகள்
  • 4 நம்பியாண்டார் நம்பி
  • 5 வரகுணனின் இறுதிக் காலம்

சோழ நாட்டிலும்,தொண்டை நாட்டிலும் ஆட்சி :

பாண்டிய அரசர்களுள் வரகுணப்பாண்டியன் காலத்துக் கல்வெட்டுகளே அதிக அளவில் காணப்பட்டன.இவனின் நான்காம் ஆட்சிக்காலக் கல்வெட்டு சோழநாட்டு திருவியலூர்,திருநெய்த்தானம் ஆகிய ஊர்களிலும்.இவனின் ஆறாம்,மற்றும் எட்டாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டுக்கள் ஆடுதுறை,கும்பகோணம்,செந்தலை ஆகிய ஊர்களிலும்.இவனின் பதினொன்றாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டுகள் திருச்சிராப்பள்ளி,திருக்கோடிகா ஆகிய ஊர்களிலும் மேலும் திருச்சோற்றுத்துறையில் சில கல்வெட்டுக்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு சோழ நாடெங்கும் இவனது கல்வெட்டுக்கள் பல இருப்பதன் மூலம் சோழ நாடு முழுவதும் இவன் ஆட்சியில் இருந்திருக்கலாம் எனப் பொதுவான ஒரு கருத்து நிலவுகின்றது.மேலும் நந்திவர்மனுடன் போர் செய்து வென்று தொண்டை மண்டலத்தினையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான் என்பது வரலாறு.

 

வரகுணப் பாண்டியனின் சமயப்பணிகள் :

நியமத்தில் தங்கியிருந்த இவன் சீராப்பள்ளி இறைவனுக்குத் திருவிளக்குகள் வைத்து,125 கழஞ்சு பொன் கொடுத்து விளக்கிட வைத்து வேம்பிலும்,நியமத்திலும் கோயில் பணிகள் செய்தான்.திருநெல்வேலி அம்பாசமுத்திரக் கோயிலுக்கு 290 பொன்காசுகள் நாள் வழிபாட்டிற்கு அளித்தான் என அப்பகுதியில் உள்ள இவனின் பதினாறாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

 

வரகுண பாண்டியனைப் பற்றிய புகழுரைகள் :

மணிவாசகர் :

திருவாதவூரடிகளாகிய மணிவாசகர் வரகுண பாண்டியனோடு இருந்த சமயம் இவனைப் பற்றித் திருச்சிற்றம்பலக் கோவையில் இரு பாடல்களைப் பாடினார்.அவையாவன:

மன்னவன் தெம்முனை மேற்செல்லமாயினும்

மால்அரியேறு

அன்னவன் தேர்புறத்தல்கல் செல்லாது

வரகுணனாந்

தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் மற்றைத்

தேவர்க்கெலாம்

முன்னவன் மூவலன் ஆளும்மற்றோர்

தெய்வம் முன்னவளே

—(306)
“புயலோங்குஅலர்சடை ஏற்றவன் சிற்றம்பலம்

புகழும்

மயலோங்கிருங்களியானை வரகுணன் வெற்பில்

வைத்த

கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன்கோபமும்

காட்டிவரும்

செயலோங்குஎயில் எரிசெய்தபின் இன்றோர்

திருமுகமே

—(307)

இப்பாடல் மூலம் “பாண்டியன் வரகுணன் போர் மேற்சென்றால் பகைவர் தேர்கள் புறம் செல்ல இயலாது!இவன் சிற்றம்பலத்து இறைவனை அன்றி பிற தெய்வம் வணங்காதவன்.அதனால் இவனே மற்றொரு தெய்வம் ஆவான்.புயலன்ன சடை உடையவன் சிற்றம்பலத்து இறைவன்.அவனை வணங்கும் வரகுணன் யானைப்படை கொண்டு பகைவர் மதிலை எரித்தான்”என மணிவாசகர் புகழ்கின்றார்.

பட்டினத்தடிகள் :

பட்டினத்தடிகள் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் வரகுணன் ஆற்றிய தொண்டுகள் அனைத்தினையும் பாடலாகக் கூறியுள்ளார் அப்பாடலில்-

வெள்ளைநீறு மெய்யிற்கண்டு

கள்ளன் கையில் கட்டவிழ்ப்பித்தும்

பாடினவென்று படாம்பல் அளித்தும்

ஈசந்தன்னை ஏத்தின என்று

காசும் பொன்னுங்கலந்து தூவியும்

வழிபடும் ஒருவன் மஞ்சனத்தியற்றி

வேம்புகட்கெல்லாம் விதானம் அமைத்தும்

புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த

பெரிய அன்பின் வரகுணதேவரும்

வரகுணன் வெந்நீறு பூசியிருப்பான்.ஈசனையே ஏத்தி இருப்பான்.ஈசனைப் பாடியவர்களுக்கு காசும்,பொன்னும் கொடுத்தான்.வேம்பு பழத்தை சிவலிங்கம் என்று விதானம் அமைத்தான்.மனைவியைக் கோயில் பணி செய்ய வைத்தான்.பார்க்கும் இடமெல்லாம் ஈசனையே கண்டு வணங்கினான்” எனப் பாடியுள்ளார் பட்டினத்தடிகள்.

நம்பியாண்டார் நம்பி :

பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பிகள் கோயில் திருப்பண்ணியர் என்ற விருத்தம் பாடினார்.அதில் அவர் வரகுணனைப் பற்றிப் பாடுகையில்

பொடியேர் தருமேனியனாகிப் பூசல் புகவடிக்கே

கடிசேர் கணைகுளிப் பக்கண்டு கோயில்

கருவியில்லார்

அடியே படவமையுங்கணை என்றவரகுணன்தன்

முடியே தருகழல் அம்பலத்தாடி தன்மெய்

கழலே!”

என வரகுணன் சிவன் மீது கொண்டிருந்த அன்பினைப் பாடியுள்ளார்.

வரகுணனின் இறுதிக் காலம் :

வரகுணனின் ஆட்சி பற்றி திருநெல்வேலி,அம்பாசமுத்திரம்,தளபதி சமுத்திரம்,கழுகுமலை,ஏர்வாடி ஆகிய ஊர்களில் 39.41,42,43 ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுக்கள் உள்ளன.43 ஆண்டுகள் ஆட்சி புரிந்த வரகுணன் கி.பி.835 ஆம் ஆண்டு இறந்தான்.

This entry was posted in பாண்டியன் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *