மகாபாரதப் போரை நினைவு கூரும் உடப்பு திரௌபதை அம்மன் திருவிழா
உடப்பூர் க. மகாதேவன்
இலங்கையின் கிழக்கு, வடமேற்கு, மத்திய பிரதேசங்களில் சக்தி வழிபாடு முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்துக்கள் வாழும் ஏனைய பிரதேசங்களில் சக்தி வழிபாடு காணப்படினும் இப்பிரதேசங்களில் சக்தி வழிபாடு குலதெய்வ வழிபாடாகக் காணப் படுகின்றது.
மஹா பத்திரகாளி மாரியம்மன், கண்ணகியம்மன் காளியம்மன் நாச்சியம்மன், இராக்குருசியம்மன், திரெளபதையம்மன் போன்ற தெய்வங்களுக்கான ஆலயங்கள் சக்தி வழிபாட்டிற்கு சான்று பகிர்கின்றன. அவ்வகையில் இந்து மதத்தின் தர்ம போதனை நூலான பகவத்கீதை தோற்றம் பெற்ற மகா பாரதக்கதையை சித்தரிக்கும் முகமாக ஆலயங்களும், வழிபாடுகளும், திருவிழாக்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.

மகாபாரதக் கதாநாயகியான தர்ம தேவதை திரெளபதியம்மன் வழிபாடு மட்டக்களப்பு, புத்தளம், பகுதிகளில் சிறப்பாக விளங்குகின்றது. மட்டக்களப்பு, பாண்டிருப்பு திரெளபதையம்மன் ஆலயம் இவற்றுக்கு சான்றாகின்றது. அத்துடன் மத்தியமலை நாட்டில் ஓரிரு இடங்களிலும் வழிபாடுகள் நிகழ்கின்றன. பக்தி சிரத்தையோடு பாரதக்கதையை ஒட்டிய உற்சவங்களும் பூஜைகளும், விசேட தீமிதிப்பு உற்சவமும் இங்கு இடம்பெறுகின்றன.
இலங்கையில் அமைந்திருக்கும் திரெளபதை தேவியின் ஆலயங்களில் தேவியின் புகழ் கூறும் ஆலயமாகவும் இற்றைக்கு 400 ஆண்டுகள் தொன்மைமிக்க ஆலயமாகவும் உடப்பு ஸ்ரீதிரெளபதை அம்மன் ஆலயம் விளங்குகின்றது.
புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் நகரிலிருந்து 16 மைல்கள் வடமேற்கில் உடப்புக் கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இங்குள்ள திரெளபதை அம்மன் ஸ்ரீருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீபார்த்த சாரதி சமேத ஸ்ரீ திரெளபதாதேவி ஆலயம் என மிக நீண்ட பெயரைக் கொண்டுள்ளது. இவ்வால யத்தில் 1917ம் ஆண்டு காலத்தில் அம்மனை மடாலயத்தில் வைத்துத்தான் பூஜித்து வந்தார்கள். 1917ம் ஆண்டுக்குப் பின்னர் அம்மனை பிரதிஷ்டை செய்து மகா மண்டபத்துடன் பூரணமிக்க ஆலயமாகக் கட்டி முடித்தார்கள். 1929ம் ஆண்டளவிலேயே ஸ்ரீ ருக்குமணி சத்தியபாமா சமேத பார்த்தசாரதிப் பெருமாளின் சிலை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு அங்கிருந்த அம்மனின் சிலை கோயிலின் அர்த்த மண்டபத்தில் வைக்கப்பட்டது.
அதன் பின்னர் 1974, 1994 களில் சுவாமி விஸ்வநாதக் குருக்கள் அவர்களின் தலைமையில் குடமுழுக்கு நடைபெற்ற மையும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து வானுயர்ந்த 108 அடி நவதள நவகலச நலகுண்டபக்ஷ நூதன இராஜகோபுர மகா கும்பாபிஷேக நிகழ்வு வெகு கோலாகலமாக 2011-01-24ம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.