ஆ.சிவசுப்பிரமணியன்
சமூகத்தின் வரலாறு என்பது பல்வேறு வகைமைகளாகப் பார்க்கத்தக்கது. இதில் பண்பாட்டு வரலாறும் ஒன்றாகும். பண்பாட்டு வரலாற்று வரைவிற்கான தரவுகளில் ஒன்றாக ‘சமூக நினைவு’ அமைகிறது. பீட்டர் பர்க் என்பவர் ‘சமூக நினைவாக வரலாறு’ (History as social memory) என்று இதைக் குறிப்பிடுவார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாறு எப்படி அச்சமூகத்தின் நினைவுகளில் வாழ்கிறதோ அதுபோல் ஒரு குறிப்பிட்ட ஆட்சி மரபின் செயல்பாடுகளும் சமூக நினைவாகத் தொடர்கின்றன. இந்நினைவானது அடித்தள மக்களின் வரலாற்று வரைவிற்குப் பெரிதும் துணைநிற்கும் தன்மையது.
அடித்தள மக்கள் தம்வாழ்வில் எதிர்கொள்ளும் முக்கிய அவலங்களுள் பாலியல் வன்முறையும் ஒன்றாகும். இன்றுவரை பல்வேறு வடிவங்களில் இது தொடர்கிறது. இராமநாதபுரம் மன்னர்களின் ஆட்சியில் அடித்தள மக்களின் மீது ஏவப்பட்ட பாலியல் வன்முறை குறித்த சமூக நினைவுகள் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.





